இயற்கையின் இசை


‘மச்சிவர்ல புத்தா’ (Machiwarla Budha) என்ற Gopal Nilkanth Dandekarரின் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட மராத்தித் திரைப்படத்தின் இசையமைப்பாளர் Dhananjay Dhumal. இந்தப் படத்தின் இயக்குநர்  Vijaydatta இவரிடம் படத்திற்கு இசையாக பறவைகளின் சப்தங்கள் மட்டுமே வேண்டும் என்று கேட்டார். கதையின் களம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராஜ்மாச்சி என்ற இடம். நகரிலிருந்து அதன் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையுடன் சேர்ந்து வரும் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தன் சொந்த ஊரான ராஜ்மாச்சிக்குப் புலம் பெயர்கிறார் மச்சிவர்ல புத்தா. மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலையின் உச்சியில் குடிசையிட்டுக் குடியமர்கிறார் அவர். இயற்கையை அவர் கண்டும் கேட்டும் உணரும் தருணங்களைக் குறிக்க இப்படி ஒரு இசை வேண்டும் என்று நினைத்து இயக்குநர் இசையமைப்பாளரிடம் கேட்க அவர் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் அலைந்து திரிந்து பறவைகளின் சப்தங்களைப் பதிவு செய்துகொண்டு வருகிறார். அந்த சப்தங்களை தாளக்கட்டுடன் ஒரு கோர்வையாக்கி பாடலாக்கிவிட்டார். மனிதக் குரல்களோ இசைக்கருவிகளோ எதுவும் இன்றி கட்டமைக்கப்பட்ட இந்தப் பாடலுக்கு இந்த ஒரு சிறிய அறிமுகம் தவிர வேறு எந்த விளக்கங்களும் தேவையில்லை என்றுத் தோன்றுகிறது.


Write a comment ...